Saturday, June 4, 2011

திரையிசைப் பாடல்களில் மாதங்கள்

தொண்ணூறுகளிலும் அதற்கு முன்னரும், சென்னை வானொலியில் தொகுப்புப் பாடல்களை ஒலிபரப்புவார்கள்... ரசிகர்களுக்கும் கேள்விகள் கேட்டு அனுப்புவார்கள்... பூக்கள் பற்றிய பாடல்கள், நிலாவைப் பற்றிய பாடல்கள், சோகப் பாடல்கள், காலையைப் பற்றிய பாடல்கள் என்று பல தொகுப்புகளை ஊரில் உள்ளோரெல்லாம் சேர்ந்து எழுதிப்போட்டு நமது தொகுப்பினை ஒலிபரப்புவார்களா என்று காத்துக் கிடப்பார்கள்.... ஒரு நல்ல பொழுதுபோக்கும் கூட!

என்னமோ தெரியவில்லை, திடீரென்று எனக்கு மாதங்களைப் பற்றிய பாடல்களைத் தொகுக்க வேண்டும்.. youtube உதவியோடு களம் இறங்கி விட்டேன். நமது தொகுப்பினை எங்காவது ஒலிபரப்புவார்களா என்று காத்துக் கிடக்க வேண்டியதில்லை! நாமே செய்து விடலாமே...

ஜனவரி குறித்து கடைசியில் சொல்கிறேன். ஏப்ரல் மாதத்தில் குறைந்தது இரண்டு பாடல்கள் எனக்கு நினைவிற்கு வருகிறது: இதயம் திரைப்படத்தில் இருந்து "ஏப்ரல் மேயிலே" மற்றும் வாலி படத்தில் இருந்து "ஏப்ரல் மாதத்தில்".
இந்தப் பாடலில் குறும்புதான் முக்கியம். வயதான இளையராஜா பிரபுதேவாவுக்குப் பாடுவதைக் கேட்பது சற்று வித்தியாசமாக இருந்தாலும் ரசிக்கும்படியான பாடல்.

"இதயம் திருடுதல் முறையா? அந்தக் களவுக்கு தண்டனைகள் இல்லையா?" மற்றும் சில வரிகள் வைரமுத்துவுக்கே உரிய குசும்புடன் அமைந்திருக்கும். இந்தப் பாடலுக்குப் பிறகு உன்னி கிருஷ்ணன் இதைப்போல பல பாடல்கள் பாடியிருப்பினும், இந்தப் பாடலைப் போல அமைய வில்லை!!



தேவன் ஏகாம்பரத்தின் பாடல்களில் எனக்குப் பிடித்த ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று (இரு விழி உனது (மின்னலே), நினைவுகள் தானே (கண்டேன் படப் பாடல்), ஸ்மையாய் (கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்) போன்றவை வேறு சில பாடல்கள்).
"பெண்: போ போ என்ற சொல்லுக்கு வா வா வா என்று அர்த்தமே, அகராதி இங்கு மாறும் அன்பே...." "ஆண்: ஆடைக்குள் மூடி நிற்கிறாய், அது கூட வேறு அர்த்தமா... ஆஹாஹா புரிஞ்சு போச்சு அன்பே" என்று நோகாமல் எழுத வைர முத்துவால் மட்டும் தான் முடியும். (அவர்தானே எழுதினார்?)

மே மாதம் 98-ல் பாட்டு கூட நல்ல பாட்டுத்தான், ஆனா இங்கே வேண்டாம் :-)

பிரியமானவளே படத்தில் பிடிக்காத பாட்டு இது... இருந்தாலும், மாதக் கணக்குக்காக, ஜூன் ஜூலை மாதத்தில்.

வரிசையாக விஜய் படப் பாடல்களே அமைகின்றன. என்னவோ தெரியவில்லை.. கார்த்திக் குரலுக்காகவும், ரீமா சென்னுக்காகவும் கண்டிப்பாக ஜூலை மலர்களே பாடலை ரசிக்கலாம்.

ஆகஸ்ட் மாதத்திற்கு எனக்குப் பாடல் கிடைக்கவில்லை... ஆனால், வந்தே மாதரம் பாட்டை வைத்திக் கொள்ளலாமே... இப்போதெல்லாம் (இந்தப் பாடல் வெளி வந்த காலத்தில் இருந்தே) இதைப் பல இடங்களில் தேசிய கீதமாகவே பாடுகிறார்கள்... ஜனகண மண தேசிய கீதம் தான்... அவ்வப்போது ஒரு மாற்றத்துக்கு நமக்குப் புரிந்த மொழியில் பாடுவதில் தவறில்லையே!!


அலைபாயுதே படத்தில் இருந்து செப்டம்பர் மாதம் பாடல்.... அக்டோபர் மாதத்திற்கும் இதேதான்... வேறு பாட்டு நினைவிற்கு வரவில்லை.

ரெட் படத்தில் இருந்து நவம்பர் மாதம் பாடல்...  இந்தப் படத்தில் இருந்து 'ஒல்லிக்குச்சி' பாட்டுத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கு.... ஆனாலும் இப்போதைக்கு இதுதான் பொருத்தமாக இருக்கும்...

ஜனவரி நிலவே என்றொரு பாட்டு இருப்பது இந்தப் பதிவை எழுத ஆரம்பித்த பிறகு தான் தெரியும்... முதல்முறை கேட்கும்போதே எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை... அது இங்கே கிடையாது. பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு எனக்குப் பாட்டு கிடைக்கவில்லை..

இன்னும் தமிழ் மாதங்களுக்கென்று ஒரு தனிப் பதிவே எழுதும் அளவுக்குப் பாடல்கள் உண்டு. இங்கே அவை கிடைக்காது. ஒரு மாதிரிக்காக வேண்டுமானால் "வைகாசி நிலவே..." (உன்னாலே உன்னாலே)...
இன்னைக்கு இவ்ளோதான்.. மீதி வேறொரு நாள்.... போயிட்டு வரேனுங்கோ!!!


1 comment:

தடம் மாறிய யாத்ரீகன் said...

Very nice and interesting... and also a good collection

Post a Comment

உங்கள் மனதில் தோன்றும் மகிழ்ச்சியோ காழ்ப்புணர்ச்சியோ சொன்னலொழிய எனக்குத் தெரியாது.