Sunday, September 25, 2011

ஏழாம் அறிவும் ஹாப்பி டேஸும்

 நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பிறகு கடைசியாக ஏழாம் அறிவு படத்தின் பாடல்கள் வந்தே விட்டன... என்னதான் ஹாரிஸ் ஜெயராஜாக இருந்தாலும் பாடல்கள் என்னமோ எனக்குப் பிடிக்கவே இல்லை. சிறந்த தொழில் நுட்பம், தெளிவான குரலமைப்பு, அனைத்தும் இருப்பினும் எப்போதும் ஹாரிஸின் பாடல்களில் அவருடைய முந்தைய படப் பாடல்களின் சாயல் இருப்பது தவிர்க்கவே முடியாது..

பாடல் தொடங்குவதற்கு முன்னர் யாரையாவது விட்டுக் கத்தச் சொல்வது, ராப் என்ற பெயரில் அர்த்தமில்லாத வரிகளை இடை சேர்ப்பு செய்வது என அவருக்கு என்று ஒரு பாணி அமைத்துக் கொண்டு, சில இயக்குனர்களின் விருப்பத்திற்கேற்பப் பாடல்களை அமைத்துத் தந்து கொண்டிருக்கிறார்.

இந்த முறை மட்டு சற்று வித்தியாசமாக -- "முன் அந்திச் சாரல்கள்" பாடல் எப்போதும் போல கார்த்திக் பாடும் ஒரு மென்னிசைப் பாடல். வித்தியாசம் என்னவெனில் ஹாரிஸ் இப்போது தெலுங்கு பக்கம் சென்று இசையெடுத்து வந்திருக்கிறார். இடையூறும் இசை மட்டும் எனக்கு ஒரு தெலுங்கு படப் பாட்டினை (ஹாப்பி டேஸ்) நினைவு படுத்துகிறது. மிகவும் சிறந்த பாடல் -- அந்தப் படத்தினை தமிழிலும் மறுபதிப்பு எடுத்து பிரகாஷ் ராஜ் வெளியிட்டார். விரைவாகவே திரையரங்குகளை விட்டு ஓடி விட்டது.


முதலில் ஏழாம் அறிவு: 


தெலுங்கு "ஹாப்பி டேஸ்"


 நன்றி: YouTube. 

Thursday, August 18, 2011

விட்டுஸ் மற்றும் குட் வில் ஹண்டிங் (Vitus and Good Will Hunting)


13 வயது சிறுவன் மருத்துவப் படிப்பை முடிப்பதைப் பற்றியும், 18 வயதில் ஒருவன் முனைவர் பட்டம் பெறுவதைப் பற்றியும், 6 வயதுக் குழந்தை 1330 திருக்குறளை ஒப்புவிப்பதையும், நாம் இப்போதும் அப்போதுமாய் செய்தியில் பார்க்க/படிக்க நேரும். இவ்வாறான ஒரு செய்தியைப் பார்க்கும் போது நம் மனதில் என்ன தோன்றும்? மகிழ்ச்சியா? ஆச்சர்யமா? வெறுப்பா? சரியாகச் சொல்ல முடியாது. எல்லாம் கலந்த ஒரு மன நிலையாகக் கூட இருக்கலாம்... ஏன் இந்தக் குழந்தைகளால் சாதிக்க முடிந்ததை நம்மால் சாதிக்க முடியவில்லை? 40 வயதாகியும் இந்த தினசரி வேலையைக் கட்டிக் கொண்டு அழுவது எதனால்? செய்தியில் இடம்பெறுமாறு ஏன் எதையும் செய்ய முடியவில்லை? இவற்றில் எதாவது ஒன்று நமக்குக் கண்டிப்பாகத் தோன்றியிருக்கும். எனக்குத் தோன்றியிருக்கிறது. எப்போதாவது இந்த "சாதனையாளர்களின்" உண்மையான மன நிலையை நம்மால் அறிய முடிந்திருக்கிறதா? இந்த "சாதனைகளைச்" செய்வதற்காக அவர்கள் இழந்த குழந்தைப் பருவத்தைப் பற்றி நாம் எப்போதாவது அறிந்திருக்கிறோமா? இதுபோன்ற நேரங்களில் தான் சினிமா என்னும் திரையுலகம் நம் உதவிக்கு வருகிறது. கற்பனையாக இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சில நல்ல படங்கள் வந்து நம் அகக் கண்ணைத் திறந்து வைப்பதுண்டு. இரண்டு சம்மந்தமே சம்மந்தமில்லாத திரைப்படங்கள் பற்றி நான் இங்கே சொல்லப் போகிறேன்.

விட்டுஸ் (Vitus) என்னும் ஒரு ஜெர்மன் திரைப்படம், குட் வில் ஹண்டிங் (Good Will Hunting) என்னும் அமெரிக்கத் திரைப்படம். இவ்விரண்டு படங்களுமே மேதாவிகளைப் (Genius-ஐ வேறெப்படி மொழிபெயர்ப்பது?) பற்றியது -- அதிலும் இளம் மேதாவிகளைப் பற்றியது. அவர்களின் திறமைகளைக் காட்டிலும் சொந்த வாழ்வினை ஆழமாக அலசிய படங்கள்.

ஒரு பொறியாளரின் குடும்பத்தில் பிறந்த விட்டுஸ் ஒரு இளம் இசைக்கலைஞன். 6-7 வயதிலேயே அவன் மிகத் திறமையாக பியானோ இசைக்க வல்லவன்.  அவனுடைய பெற்றோர் அவனை ஒரு மேஸ்ட்ரோ (Maestro) ஆக ஆக்கவும், இளம் வயதிலேயே நிறைந்த புகழை அவன் மூலம் அடைய விரும்புகின்றனர். ஊரின் மிகச்சிறந்த பியானோ ஆசிரியரிடம் அவனுக்குக் கற்பிக்கின்றனர். நம் விட்டுஸ் அவனுடைய தாத்தாவிடம் மிகவும் அன்புடன் இருக்கிறான். தாத்தா அவனுக்குப் பல விசயங்களைக் கற்றுத் தருகிறார் -- விமானம் ஓட்டுவது உட்பட! விட்டுஸிற்கு தன்னைவிட வயது அதிகமான ஒரு பெண்ணிடம் காதல் வருகிறது. அந்தப் பெண் இவனை ஏற்க மறுக்கிறாள். 18 வயதுப் பெண் எப்படி ஒரு 12 வயதுப்பையனை ஏற்றுக் கொள்வாள்? ஒரு கட்டத்தில் விட்டுஸிற்கு அவனுடைய வாழ்க்கை மீது வெறுப்பு உண்டாகிறது. நிற்காத பயிற்சியும் தேவையற்ற கவன ஈர்ப்புகளும் அவனைச் சோர்வடைய வைக்கிறது. பையன் ஒரு விபத்தில் தன்னுடைய திறமை அனைத்தையும் இழப்பதாகக் காட்டுகிறார்கள். அவனுடைய தந்தை வேலை இழக்கிறார் -- வீடு சிரமத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் விட்டுஸ் தன்னுடைய உண்மையை -- தன் திறமை இழக்காத விஷயத்தையும், தன்னுடைய நாடகத்தையும் பற்றி -- தாத்தாவிடம் சொல்லுகிறான். தாத்தாவின் பணத்தை இவன் பங்குச் சந்தையில் முதலீடு செய்து பெருத்த லாபம் அடைகிறான் -- தனக்கு விருப்பமான வாழ்க்கையை வாழ்கிறான். இறுதியில் அனைத்தும் சுபம். அவன் பெற்றோர் விரும்பியதைப் போலவே நம்மாள் ஒரு மேஸ்ட்ரோ ஆகிறான்.


வில் ஹண்டிங் ஒரு -- நம்மூர் மொழியில் -- தறுதலை. 18 வயதில் ஊர் சுற்றுகிறான், சண்டையில் இறங்குகிறான், கைதாகிறான்.... அதே நேரத்தில் இவன் ஒரு கணித மேதை -- அவனுக்கு பட நினைவு (photographic memory) இருக்கிறது என்பதும், எந்த ஒரு விஷயத்தையும் அவன் ஒரு முறை படித்தால்/பார்த்தால் மறப்பதில்லை என்பதும் நம்க்குத் திரைப்படம் போகப் போகப் புரிகிறது. என்னதான் பொறுக்கியாக இருந்தாலும் அவன் கண்ட இடத்தில் வேலை செய்வதில்லை -- MIT-யில் துப்புறவாளனாக வேலை செய்கிறான்... இந்த மிகச் சிறந்த கல்வி நிறுவனத்தின் மாணவர்களாலும் பேராசிரியர்களாலும் தீர்க்க முடியாத கணிதப் புதிர்களைத் தீர்க்கிறான். ஒரு கணிதப் பேராசிரியர் இவன் திறமையைப் பார்த்து இவனை நல்வழிக்குக் கொண்டு வர உதவி செய்ய முற்படுகிறார் -- இவனைச் சட்டத்தின் பிடியில் இருந்து விடுவித்துத் தன்னுடன் வைத்துக் கொள்கிறார். இவனுடைய கோபத்திற்கும், மன நிலைக்கும் தீர்வு காண ஒரு மன நல மருத்துவரின் உதவியை நாடுகிறார். வில்லுக்கோ இது எதுவும் பிடிக்கவில்லை. அவனுக்கு அவனுடைய சிறிய வட்டத்தை விட்டு வெளியே வரப் பிடிக்கவில்லை. அவன் காதலி கேட்டும் அவளுடன் செல்ல மறுக்கிறான் -- சண்டை போடுகிறான். இந்த ஒரு ஆச்சரியமான மூளைக்குப் பின்னணியில் குடிகாரத் தந்தையால் சிறு வயதில் இவன் பட்ட துன்பங்கள் வெளி வருகின்றன.. நம் மருத்துவரின் உதவியுடன் எப்படி இவன் தன் விருப்பத்தினை நோக்கிப் பயணிக்கிறான் என்பதை அழகாகக் காட்டுகிறது "குட் வில் ஹண்டிங்".
இத்திரைப்படங்கள் முற்றிலும் வேறுபட்ட கதைக் களத்தில் அமைக்கப்பட்டவை -- அதே நேரத்தில் அழகான ஒற்றுமையைக் கொண்டவை.  பாருங்கள், பார்த்து அடுத்தவருக்குச் சொல்லுங்கள்.



Friday, July 15, 2011

இணையமும் நம்முடைய ஞாபக சக்தியும்

ஒரு பத்து வருடத்திற்கு முன்னர் நம்மில் எத்தனை பேர் தெரு மூலையில் இருக்கும் ஒரு டீக்கடைக்கு தினத்தந்தி பார்ப்பதற்கென்றே சென்றிருக்கிறோம்? எத்தனை பேர் நூலகத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருக்கிறோம்? ஆனந்த விகடனோ, இந்தியா டுடேயோ, ஹிண்டு பேப்பரோ எத்தனை பேர் கடைக்குச் சென்று காத்திருந்து வாங்கி வந்திருக்கிறோம்? இந்த இணைய யுகத்தில் இவையெல்லாம் செய்கிறோமா? அனைத்தையும் நாம் கூகிள் செய்து விடுகிறோம். எந்நேரமும் இணையத்திலேயே இருக்கும் நம்மில் பலருக்கு அந்த இணையம் நம்மில் எந்த விதமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெரிவதில்லை.  இப்போது,  எந்த ஒரு செய்தியையும் நாம் நினைவில் வைத்திருப்பதில்லை. நம்முடைய நாட்டின் மூன்றாவது பிரதமர் யார்? கர்னாடகத்தில் எத்தனை நதிகள் ஓடுகின்றன? சிக்கிம் மாநிலம் எங்கிருக்கிறது? இவை எல்லாம் தெரிந்திருந்தால் தான் ஒருவரை அறிவாளியாகக் கண்டு கொண்ட நாள் நம் அனைவருக்கும் தெரியும். இப்போதெல்லாம் நாம் எந்த ஒரு புத்தகத்தையும் படித்து மனப்பாடம் செய்யத் தேவை இல்லை. அனைத்திருக்கும் இருக்கவே இருக்கிறது "Google".

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தின் அறிவியலாளர்கள் இந்த கூகிளால், பொதுவாக இணையத்தால் நம் மூளையில், நம்முடைய நினைவு சக்திக்கு, என்ன விளைவுகள் வருகிறது என்று அறிவியல் பூர்வமாக பல பரிசோதனைகளைப் பலர் மீது நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வது இதுதான்: நாம் இணையத்தின் மீது அளவுக்கு அதிகமாகச் சார்ந்திருக்கிறோம். இணையத்தினை மூளைக்கு ஒரு External memory-யாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமாம். இப்போதெல்லாம் ஒரு கேள்விக்கு பதில் என்ன என்பதை விட எங்கே கிடைக்கும் என்றுதான் அறிந்து வைத்திருக்கிறோமாம்.. உண்மைதானே... யாரோ உங்களிடம் சென்னையிலிருந்து குவகாத்திக்கு எப்படி செல்லலாம் என்று கேட்டால், பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அனுபவத்திலிருந்தோ அல்லது எங்கோ படித்ததிலிருந்தோ பதில் சொல்லியிருப்போம். இப்போதோ அதெல்லாம் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. இணையத்திற்கு சென்று ரயில் நேரங்கள் முதல் குவகாத்தியில் தங்குமிடம் வரை அனைத்தையும் இணையத்திலேயே பார்த்து விடலாம்.

நம்முடைய இணையச் சார்பு சற்று அளவிற்கு அதிகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்றும், நாம் இணையம் இல்லாமல் இருக்கும்போது என்னவோ ஒரு நண்பரையே இழந்தது போலத்தான் உணர்கிறோம் என்றும் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை முடிக்கிறார்கள்.

இதென்னமோ மிகவும் சின்ன செய்தியாக இருக்கலாம்... ஆனால் இதைப் போன்ற ஒரு ஆய்வினை systematic-ஆக செய்திருப்பது இப்போதுதான். இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் சிறந்த Science இதழில் வெள்வந்திருக்கின்றன. கால்குலேட்டரால் சீரழிந்து போன கூட்டல் கழித்தல் பெருக்கல் அறிவு போல நம்முடைய நினைவு சக்தியும் சீரழிந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Tuesday, July 12, 2011

ரங்க ராட்டினம் சுத்தலியோ.... ரங்க ராட்டினம்!!!

 நம்ம ஊரு திருவிழாவுக்கெல்லாம் வருமே ரங்க ராட்டினம்... அதே தான், என்ன இது உலகத்துலயே பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய... ச்சீ ச்சீ... உயரமான (steepest) ரங்க ராட்டினமாம்... ஜப்பான் நாட்டுல ஃபுஜியோஷிடாவில் இருக்குற இந்த ராட்டினத்தின் மொத்த நீளம் ஒரு கிலோ மீட்டருக்கும் மேலயாம்... கிட்டத்தட்ட ரெண்டு நிமிஷம் ஆகுமாம் முடியறதுக்கு... நம்ம ஊர்லயெல்லாம் சவால் விடுவாங்கள்ள... முந்தானாள் தின்னதெல்லாம் வெளிய வந்துரும் அப்பிடின்னு, அது இங்க சத்தியமா அது நடக்கும் போல... கீழ இருக்குற சலனப் படத்தைப் பாருங்க... தலை சுத்தும். 

நான் ஒரு வாட்டி டிஸ்னி லாண்டுக்குப் போயிருக்கும்போது (அனஹைம், கலிஃபோர்னியா) அங்க கலிஃபோர்னியா ஸ்க்ரீமின்' (California Screamin') அப்பிடீன்னு ஒரு ராட்டினம். நம்ம ஜப்பான் காரங்க மாதிரி ரெண்டு நிமிஷமெல்லாம் கிடையாது, ஒரே ஒரு நிமிஷம் தான் அதுக்குள்ள பெண்டு நிமிந்துருச்சு... என்னா ஓட்டம் என்னா உயரம் அப்பிடீன்னு அசந்து போயிட்டேன்... எனக்குப் பக்கத்துல ஒரு சின்னப் பொண்ணு, ஒரு பத்து பதினொரு வயசுதான் இருக்கும். என்னையப் பாத்து "Put your feet down, it helps" (காலைக் கீழ வெச்சுக்கோ, உதவியா இருக்கும்) அப்பிடீன்னுச்சு... ரொம்ப அனுபவ சாலி போல இருந்துச்சு... இதுக்கு முன்னாடி போயிருக்கியா தாயீ அப்பிடின்னேன்... "A few times" அப்பிடின்னுச்சு... சரிடான்னு நானும் காலை அமுக்கி வெச்சுக்கிட்டேன்... கெளம்புனப்புறம் தான் தெரிஞ்சுச்சு... காலைக் கீழ வெக்கலின்னா வயித்துல இருக்குறதெல்லாம் வெளிய வந்திருக்கும்னு... அந்த உயரத்துக்கே நான் கலங்கிட்டேன்... ஜப்பான்ல எப்பிடி இருக்கும்னு என்னால நெனச்சுக் கூட பாக்க முடியல... 


ஜப்பான்ல இருக்குற தக்கபிஷா (takabisha) ராட்டினத்தைக் கட்டி முடிக்க 37 மில்லியன் US டாலர் செலவாச்சாம்... இந்த மாசம் பதினாறாம் தேதி (ஜூலை 16, 2011) திறக்கப்போற இந்த ராட்டினத்துல சுத்தி வர்றதுக்கு 12 டாலராமாம். ஒரு கணக்கு வாத்தியாரு 3 மில்லியன் டிக்கட் வித்தா அத சம்பாதிச்சுரலாம்னு கணக்கு போட்டு சொல்லியிருக்காரு. 

சனங்களே, சகோதர சகோதரிகளே, திரைகடல் ஓடி திரவியம் தேடுறீங்களோ, படிக்கிறீங்களோ, ஊர் சுத்துறீங்களோ, இல்ல அப்பா சேத்து வெச்ச சொத்தக் கரைக்கிறீங்களோ என்னமோ பண்ணுங்க... இந்த ராட்டினத்துல ஒரு வாட்டி சுத்தி வந்துட்டு எப்பிடி இருக்குன்னு வாந்தி... ச்சீ... எழுதுங்க!!

பொழுதுபோக்க எதாச்சும் கண்டுபிடிங்கடான்னா இப்பிடி கொல வெறியோட தான் திரியுறாய்ங்க... 

அன்புடன் மதி.

அதே மாதிரி போட்டுக் குடுங்க சார்...

தமிழ்த் திரைப்படங்களானாலும் சரி, பொதுவாக இந்தியத் திரைப்படங்களானாலும் சரி, பாடல்கள் இல்லாமல் இருக்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில படங்கள் பாடல்கள் இல்லாமல் வந்தாலும், ஒரு படத்தினை ஆண்டாண்டு காலங்கள் நினைவில் நிறுத்துவது என்னமோ பாடல்கள் தான். தேவர் மகன் படத்தின் முழுக் கருவையும் "வானம் விட்டு வந்த..." என்ற சோகப் பாடல் சொல்லி விடும். முதல் மரியாதையின் அனைத்துப் பாடல்களையும் கேட்டால் அந்தப் படத்தின் ரசம் நம்முள் மீண்டும் ஒரு முறை இறங்கி விடும். "தமிழா தமிழா..." பாடல் ரோஜாவின் உயிரோட்டத்தைச் சொல்லி விடும்.

அனைவரும் பிறவிக் கலைஞராக இருக்க முடியாது. சிலர் காலம் காலமாகக் கற்றும், பயிற்சி செய்தும் மாத்திரமே ஒரு துறையில் சிறப்படைய முடியும். அவ்வாறு கற்கும் போது நம்முடைய குருவின் சாயல் நம்முடைய படைப்பிலும் இருப்பதைத் தவிர்ப்பது என்பது மிகக் கடினம். உந்துதல் (inspiration) என்பதற்கும் மாதிரி (copy) என்பதற்கும் நூலிழை அளவுதான் வேறுபாடு இருக்கிறது என்பது என் எண்ணம். உதாரணம், பெரும்பாலான ரகுமானின் இசையானது மேற்கத்திய இசையால் உந்தப் பட்டது. தேவாவின் பல பாடல்கள் மேற்கத்திய இசையை மாதிரி எடுக்கப்பட்டவை (ஓ நெஞ்சே & Backstreet Boys, அகிலா அகிலா & Bob Marley). இப்படி பல பாடல்களின் மூலப் பாடல்கள் தெளிவாகத் தெரிந்தாலும் சில பாடல்களின் கரு, ராகங்கள், வரிகள், அல்லது அமைப்பு அதற்கு முன்னர் கேட்டது போலவும் பார்த்தது போலவும் இருப்பதுண்டு. அதைப்போன்ற சில பாடல்களை இங்கே தொகுத்துள்ளேன். ஒரே இயக்குனரின் அல்லது இசையமைப்பாளரின் பாடல்கள் ஒன்று போலவே அமைவதுண்டு. அவற்றை இங்கே தவிர்த்துள்ளேன். (உதாரணம்: யுவனின் சக்கைப் போடு போட்டானே (தாஸ்) & அடடா மழைடா அடை மழைடா (பையா)).

மதறாஸப்பட்டினம் படத்தை டைட்டானிக் அல்லது லகான் படத்தின் மறுபதிவு என்று சொல்லுவேன். அதை உறுதிப் படுத்துவது "பூக்கள் பூக்கும் தருணம்" பாடல். சைந்தவியின் குரலும் கவிஞரின் வரிகளும் (நா. முத்துக்குமார்?) பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்க வைப்பினும் அந்த ஆங்கில வரிகள் வரும்போது எனக்கு லகானின் காலத்தால் அழியாத "ஓ ரே சோரி..." பாடல் தான் நினைவிற்கு வரும். கீழே இரண்டு பாடல்களின் சலனப் படங்கள்.


இப்போதுதான் நினைவிற்கு வருகிறது இந்தப் படங்களின் இன்னொரு ஒற்றுமையும். லகான் படத்திலும் மழையைப் பற்றி ஒரு பாடல் வரும். மதறாசிலும் அதே போல் ஒரு பாடல் (மேகமே...)  இருப்பதை நான் சொல்ல வேண்டாம். அது சரிதான். லகானை எடுப்பது என்றான பின், பாட்டை ஏன் விட்டு வைக்க வேண்டும். இதில் கூத்து என்னவென்றால் இதே இயக்குனர் தெய்வத்திருமகள் படத்தில் நம் அன்பிற்குரிய விக்ரமை "சாம்" ஆக நடிக்க வைத்திருப்பதுதான். தெய்வத்திருமகள் பார்ப்பதற்கு முன் மறந்தும் கூட "ஐ ஆம் சாம்"- படத்தைப் பார்த்து விடாதீர்கள் -- விக்ரமின் கடின உழைப்பை பாராட்டாமல் போய் விடுவீர்கள்.

செல்வராகவன் யுவனிடம் இருந்து பிரிந்த உடன் வந்த இரண்டு படங்கள் யுவனின் "சர்வம்" மற்றும் செல்வாவின் "ஆயிரத்தில் ஒருவன்".. இரண்டு படங்களிலும் ஒரே மாதிரி பாடல் இடம்பெற்றிருப்பது ஒரு coincidence ஆக மட்டும் இருந்து விட முடியாது. நமக்காகவே இந்த இரண்டு பாடல்களையும் கலந்து கட்டி கீழே இருக்கும் சலனப் படத்தில் அடித்திருக்கிறார்கள்!!


இன்னும் சில பாடல்களைச் சேர்ப்பதாக இருந்தேன்.. வேறு ஒரு நாளில்.

அன்புடன் மதி.

பி. கு. தலைப்பின் அர்த்தத்தை விளக்க வேண்டாம் என நினைக்கிறேன். என்னதான் இசையமைப்பாளர்களை நாம் குற்றம் சொன்னாலும், இயக்குனரின் இந்தக் கேள்விதான் அவர்களை இவ்வாறு இசையமைக்கத் தூண்டுகிறது.

Monday, July 11, 2011

மயக்க ஊசியும் சர சர சாரக் காத்தும்.

ரகுமான், யுவன் சங்கர் ராஜா, ராஜா, ஹாரிஸ் ஆகிய யாரும் புதிய பாடல்களைத் தராத நேரத்தில் கடந்த சில வாரங்களாக நான் 2000-ம் வருடத்திற்கு முந்தைய பாடல்களைக் கேட்டுக் களித்துக் கொண்டிருந்தேன். புதிதாக வந்த எந்தப் பாடலும் மனதில் நிற்காத நேரத்தில் வந்தன "வாகை சூட வா" மற்றும் "யுவன் யுவதி".
முதலாவதிற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சில பாடல்கள் கேட்கும் படி உள்ளன... வைரமுத்தின் வழக்கமான கிராமத்துக் குறும்போடு வந்திருக்கிறது "சர சர சாரக் காத்து வீசும் போதும்"... சின்மயி மிகவும் நன்றாகப் பாடியிருக்கிறார் -- நீண்ட நாட்கள் கழித்து... என்னதான் இந்தப் பாடல் எங்கோ கேட்ட உணர்வைக் கொடுப்பினும், கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. "மொடக்கத்தான் ரசம்...", "இத்துப் போன நெஞ்சத் தெக்க", "டீயைப் போல ஆத்துற.." போன்ற வைரமுத்துவுக்கே உரிய குசும்பான வரிகளோடு வந்திருக்கிறது.
இதே படத்தில் வேறு சில பாடல்களும் நன்றாகத்தான் உள்ளன. "தஞ்சாவூரு மாடத்தி..." பாடல் சிறிய பாடலாய் இருந்தாலும் ஜெயமூர்த்தியின் குரல் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கிறது. இவர் "mainstream" பாடகரா என்பது தெரியாது, இருந்தாலும் இவரைப் போன்ற அமெச்சூர்களால் தான் இப்படிப்பட்ட ஒரு துள்ளலோடு பாட முடியும். "போறானே போறானே" பாடலின் ஆரம்ப குழல் இசை "நான் போகிறேன் மேலே மேலே..." (நாணயம்) பாடலை நினைவு படுத்துகிறது. 

"யுவன் யுவதி" படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்திருக்கிறார். ஆறு பாடல்கள் இருப்பினும், மனதில் நிற்பது என்னவோ "மயக்க ஊசி..." மட்டும்தான். விஜய் பிரகாஷ் கடந்த இரு வருடங்களாக அத்தனை நல்ல பாடல்களைப் பாடி வைத்து விட்டார்... இவர் நீண்ட நாட்கள் களத்தில் இருக்க வேண்டும் என்று நமக்கு ஆசை. இந்தப் படத்தில் துள்ளலாக சில பாடல்கள் உள்ளன என்பதை மறுக்க இயலாது. குத்துப் பாட்டு ரசிகர்களுக்கென்றே "கொலக் குத்து". 


சமீப காலமாக பழைய மற்றும் புதிய ஹாலிவுட் மற்றும் இன்னபிற நாட்டுப் படங்களைப் பார்த்துள்ளேன். அவற்றைப் பற்றி கூடிய சீக்கிரம் எழுத முயற்சிக்கிறேன். 

அன்புடன், 
மதி. 



Saturday, June 25, 2011

திரையிசைக் கவிதையில் உரையாடல்கள் - 1

இந்தப் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. அனைத்து விதமான காரணங்களுக்காகவும்: இசை, பாடகர்கள், நடிக நடிகையர், நடனம், கவிஞர், படப்பிடிப்பு, கவித்துவம், போன்ற அனைத்திற்கும்! நான் இங்கே காட்டப் போவது ஒரு சில வரிகள் மட்டும்தான். இந்த வரிகள் எந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கின்றன என்று சொல்லப் போவதில்லை.

*****

"தாமரை மலர் கொண்டு
உடல் செய்த ஓவியமே,
என்னுடல் பாரம் மட்டும்
எந்த விதம் தாங்குகிறாய்?"

"மீன்களைச் சுமப்பதொன்றும்
நீருக்கு பாரமில்லை;
காதலைச் சுமக்கையிலே
காதலனும் பாரமில்லை!"

*****

இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்?

நட்சத்திரங்களைத் தூசு  தட்டி நான்
நல்ல வீடு செய்வேன்.

நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப் போய்விடில் என் செய்வாய்?

உருகிய துளிகளை ஒன்றாக்கி
என்னுயிர் கொண்டே உயிர் தருவேன்.

ஏ ராஜா... இது மெய்தானா?

ஏ ராணி,
தினம் நீ செல்லும்
பாதையில் முள்ளிருந்தால் நான்
பாய் விரிப்பேன் என்னை...

நான் நம்புகிறேன் உன்னை!!

*

நீச்சல் குளமிருக்க
நீரும் இல்லை இனி
எங்கு நீச்சல் அடிப்பேன்?!

அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க!!!

இந்த ரீதியில் அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு?

காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கைது செய்வதென ஏற்பாடு!!

பெண் நெஞ்சை
அன்பால் வென்றாய்...

ஏ ராணி...
அந்த இந்திர லோகத்தில்
நான் கொண்டு தருவேன்
நாளொரு பூ வீதம்...

உன் அன்பு அது போதும்!!!

*****

தாமரையே தாமரையே
நீரில் ஒளியாதே...
நீ நீரில் ஒளியாதே!!
தினம் தினம் ஒரு சூரியன் போல
வருவேன் வருவேன்...
அனுதினம் உன்னை
ஆயிரம் கையால்
தொடுவேன் தொடுவேன்!

சூரியனே, சூரியனே
தாமரை முகவரி தேவையில்லை!!
விண்ணில் நீயே இருந்து கொண்டே
விரல் நீட்டித் திறக்கிறாய்!
மரங்கொத்தியே, மரங்கொத்தியே!
மனதைக் கொத்தித் துளையிடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்துத்
தூங்கும் காதல் எழுப்புவாய்!!

*****

இப்போது நினைத்தால் அவ்வளவு பாடல்கள் நினைவிற்கு வருகிறது... இன்றைக்கு இது போதும்... ஒரே ஒரு வருத்தம் தான் -- இதில் என்னுடைய சொந்த சரக்கு எதுவும் இல்லை என்பதுதான்.. அதனால் என்ன, என்னால் முடிந்த வரை என்னுடைய ரசனையை வெளிப்படுத்துகிறேனே, அது போதும் எனக்கு.

மீண்டும் சந்திக்கும் வரை,
அன்புடன் மதி. 

Sunday, June 12, 2011

தூக்கம்

விளக்கின் வெளிச்சம்,
தூக்கம் இல்லை.
விளக்கணைத்த பின்னர்
சூழ்ந்த இருட்டும்
கண்ணை இருட்டவில்லை.
போர்வையும் போர்த்தினேன் - 
இமை மூடிய
இருட்டும் போதாததால்.
மூடிய இமைக்கும், 
போர்த்திய போர்வைக்கும், 
இடையில் சிரிக்கும் என்
வெளிச்சக் காதலியை 
எப்படித் துரத்தி
என் உறக்கத்தை
அணைப்பேன்?



Friday, June 10, 2011

இணையம் எனும் போதை

காலை எழுவது முதல் இரவு தூங்கும் வரை ஒரு நாளில் நான் செலவிடும் 15-16 மணி நேரத்தில் பாதிக்கும் மேலான நேரம் இணையத்தில் தான் செலவிடப் படுகிறது என்பதை நினைத்துப் பார்க்கும் போது நான் எந்த அளவிற்கு இந்த போதைக்கு அடிமைப் பட்டிருக்கிறேன் என்று அதிர்ச்சியாக இருக்கிறது. எனக்கும் குடித்து விட்டு கவிழ்ந்து கிடக்கும் யாருக்குமே உபயோகமில்லாத ஒரு குடிகாரனுக்கும் என்ன வித்தியாசம் எனத் தெரியவில்லை. நான் இந்த உலகில் தனியனா எனில் இல்லை... எனைப் போல எத்தனையோ பேர் இந்த போதைக்கு அடிமையாகி நாசமாகிக் கொண்டிருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

எப்படி இந்த ஒரு நிலைமைக்கு வந்தேன்; ஏன் இப்படி சீரழிந்து கிடக்கிறேன் என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் விழிக்கிறேன்... காலை எழுந்தவுடன் தொலைபேசியில் மின்னஞ்சல் பார்ப்பதோடு தொடங்கும் என் நாள். அப்படியே அங்கிருந்து ஃபேஸ்புக், செய்தித் தளங்கள், ஊரில் என்ன நடக்கிறது, திரையுலகில் என்ன நடக்கிறது, கிரிக்கெட் என்னாயிற்று, ஃபேஸ்புக்கில் யார் என்ன செய்து கொண்டிருக்கார்கள், என்ன பகிர்ந்து கொண்டனர், யார் என்னைப் புதிதாகத் தொடர்கிறார்கள், புகைப்படங்கள், மின்வணிகத் தளங்களில் சிறிது நேரம் என்று அடுத்த ஒரு மணி நேரம் இப்படிக் கழிகிறது... அங்கிருந்து பணிக்குச் சென்றதும், என்னுடைய துறையில் என்ன நடக்கிறது, ஆராய்ச்சியில் என்ன புதிதாய் வந்துள்ளது, என்று அங்கே ஒரு மணி நேரம். இவை நடப்பதனைத்தும் என் பணியைச் செய்து கொண்டே (multitasking- என்றொரு இழவு). பணியில் புதிதாய் வந்த பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று மீண்டும் இணையத்தின் துணை நாடல்... அதற்காகப் படித்துக் கொண்டும், தேடிக் கொண்டும் இருக்கும் போதே பல்வேறு கவனச் சிதறல்கள் -- இணையத்தில் இருந்துதான்... அப்படியே தினம் கடந்து வீட்டிற்கு வந்தும் கூட மீண்டும் இணையம், ஃபேஸ்புக், ஜி-மெயில், இத்யாதி இத்யாதி... புதிய பாடல்கள், படங்கள், என்று மெத்தையில் கிடக்கும் வரை நோண்டிக் கொண்டே கடந்து விடுகிறது நாள்... மறுநாள் இதே கதைதான்... இப்படி நடப்பது எனக்கு மட்டும் தானா? இல்லை பெரும்பாலானவருக்கு இதே கதிதானா? மதுவில் வீழ்ந்தவருக்கும், புகையில் அடிமையானவருக்கும் நடத்தப்படும் மறுவாழ்வு மையங்கள் எனக்கும் (நமக்கும்) தேவையா?

2005-ற்குப் பிறகுதான் எனக்கு இந்த நிலைமை. அதற்கு முன் இணையத்திற்குத் தடையில்லாத் தொடர்பு இருந்ததில்லை. அப்போது நான் அடிமைப்பட்டுக் கிடந்தது புத்தகங்களுக்கு. நாள் போவதே தெரியாமல் 6 - 7 மணி நேரமெல்லாம் புத்தகத்தில் மூழ்கிக் கிடந்திருக்கிறேன்... என் மூளை புதிய அறிவினைத் தேடித் தேடிப் படிக்கச் சொல்கிறது...

இப்படி ஒரு நிலைக்கு எதாவது பெயர் இருக்கிறதா? யாரேனும் இந்தப் போதையில் இருந்து வெளியே வர ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களா? கடுமையான பயிற்சி வேண்டுமா?  இதை நிறுத்தாவிட்டால் நான் இறந்து விடுவேன் என்ற ஒரு நிலை, உயிர் பயம், வர வேண்டுமா? யோகாசனம் செய்ய வேண்டுமா? வேலையில் ஒரு பொறுப்பு வர வேண்டுமா? இதற்கெல்லாம் விடை இணையத்தில் இருக்கிறது என்று எனக்கும் தெரியும்... ஆனால் அங்கே சென்று விடை தேடி மீண்டும் இதே புலம்பலைப் புலம்ப நான் தயார் இல்லை. நீங்கள்?


-மதி.

PS: எனக்குத் தெரிந்த வரையில் கீழ்க்கண்ட வழிகள் கண்டிப்பாக உதவும்.

  1. இணையத்தின் துணையின்றி புதிதாய் எதாவது கற்றுக் கொள்ளல்: உதாரணமாக ஒரு இசைக் கருவி, சமையல்,அல்லது ஒரு விளையாட்டு (டென்னிஸ்)
  2. செயல் அல்லது வாழ்க்கைத் துணை ஒருவர் (Activity or Life Partner)
  3. கணிப்பொறியை முடிந்தளவு தவிர்த்தல்
  4. பணியிடத்தில் இணையப் பயன்படுத்தலில் கட்டுப்பாடுகள் கொண்டு வருதல்
உங்களுக்காக ஃபேஸ்புக்கில் என் நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்ட சலனப்படம்

Wednesday, June 8, 2011

அனு(Honey)ராதா ஸ்ரீராம்

சுசீலா, ஜானகி, அல்லது சித்ரா அளவுக்கு வரவில்லை என்றாலும் அனு தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த பாடகிகளில் ஒருவர். பொதுவாகவே எனக்கு பெண்குரலில் மட்டுமே உள்ள பாடல்களில் அவ்வளவு விருப்பம் இல்லை -- ஒரு சில தனித்துவம் மிக்கப் பாடல்களைத் தவிர் (கண்ணாளனே, கள்வரே, கன்னத்தில் முத்தமிட்டால் போன்றவை).

இருந்தாலும், அனுவின் ஒரு சில பாடல்களை இங்கே தொகுக்க வேண்டும்.. அவர் பாடியதில் எனக்குப் பிடித்தவை பெரும்பாலும் ஜோடிப் பாடல்கள்.

முதல் பாடல், அவர் சங்கர் மகாதேவனுடன் பாடிய "தின்னாதே..." இந்தப் படத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் இந்தப் பாடலில் எனக்குப் பிடித்தது சிம்ரன் இல்லை, அனுராதாதான்... "சீச்சீச்சீ... " என்று ஆரம்பிக்கும் போதுதான் பாடலே ஆரம்பிப்பது போல எனக்கு ஒரு பிரமை. 

"உனை நினைத்து நான் விழித்திருந்தேன்... இரவுகளில் தினம் வண்ண நிலவுக்கு துணையிருந்தேன்..." என்று இந்தப் பாடலில் பாடும்போது ஏக்கம் வருவது விஜய்க்கு மட்டுமல்ல... நமக்கும் கூடத்தான்! 

இதே படத்திலேயே வரும் "எந்தன் குயிலெங்கே" பாடலும் கூட அனுவுடைய முத்து தான். 

அனுராதா அவ்வளவுதான் என்று அனைவரும் நினைத்திருந்த போது "ராவணன்" படத்தில் "காட்டுச் சிறுக்கி... " மூலம் மீண்டும் நம்மை மகிழ்ச்சியடைய வைத்தார்... 


"மல்லிகையே மல்லிகையே..." பாட்டில் விதிகளுக்கு உட்பட்டுப் பாட சித்ராவையும், குறும்பு கலந்து பாட அனுவையும் தேவா உபயோகித்திருப்பார்... அங்கங்கே சிரிப்பைக் கலந்து மனதைக் கொள்ளை கொள்வதென்னவோ அனுதான். 



தேவா எந்த அளவுக்கு தன்னுடைய சொந்த இசையை உபயோகிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்... இந்தப் பாட்டு கூட அப்படி ஒரு பாட்டு தான் என்று எனக்கு இப்போது தான் தெரியும் -- இருந்தாலும் "இங்கு தேள் கடித்தாலும் தெரிவதில்லை, என்னாச்சு என்னாச்சு எனக்கும்..." என்று பத்தாண்டுகளுக்கும் மேலாக கேட்டாயிற்று... அனுவுக்காக "ஒரு பொண்ணு..."



"அன்பென்ற மழையிலே" பாட்டுதான் இவர் பாடியதிலேயே சிறந்த பாடலாக இருக்க வேண்டும்... ஒரு பாடகருடைய திறமையை முழுதாக உபயோகிப்பது ரஹ்மான் தான். 



"அப்படிப் போடு" இல்லாமல் இந்தப் பகுதி முழுமையடையாது. தமிழ் நாட்டையே ஆட வைத்த பாடல்.. இதில் "இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..." என்று கேள்வி வேறு... 

அய்யய்யோ, முடிஞ்சுருச்சுன்னு பாத்தா, ஒரு கலருக்கே தமிழ் நாட்டுல ஒரு புது மரியாதையைக் கொண்டு வந்த "கறுப்புதான் எனக்குப் புடிச்ச கலரு..." இல்லாம எப்பிடி? 

இன்னும் எவ்வளவோ இருந்தாலும், எனக்கு இந்த நேரத்துக்கு ஞாபகம் வந்தது இவ்ளோதான்... 

மீண்டும் சந்திக்கும் வரை.... 
--மதி. 

Saturday, June 4, 2011

திரையிசைப் பாடல்களில் மாதங்கள்

தொண்ணூறுகளிலும் அதற்கு முன்னரும், சென்னை வானொலியில் தொகுப்புப் பாடல்களை ஒலிபரப்புவார்கள்... ரசிகர்களுக்கும் கேள்விகள் கேட்டு அனுப்புவார்கள்... பூக்கள் பற்றிய பாடல்கள், நிலாவைப் பற்றிய பாடல்கள், சோகப் பாடல்கள், காலையைப் பற்றிய பாடல்கள் என்று பல தொகுப்புகளை ஊரில் உள்ளோரெல்லாம் சேர்ந்து எழுதிப்போட்டு நமது தொகுப்பினை ஒலிபரப்புவார்களா என்று காத்துக் கிடப்பார்கள்.... ஒரு நல்ல பொழுதுபோக்கும் கூட!

என்னமோ தெரியவில்லை, திடீரென்று எனக்கு மாதங்களைப் பற்றிய பாடல்களைத் தொகுக்க வேண்டும்.. youtube உதவியோடு களம் இறங்கி விட்டேன். நமது தொகுப்பினை எங்காவது ஒலிபரப்புவார்களா என்று காத்துக் கிடக்க வேண்டியதில்லை! நாமே செய்து விடலாமே...

ஜனவரி குறித்து கடைசியில் சொல்கிறேன். ஏப்ரல் மாதத்தில் குறைந்தது இரண்டு பாடல்கள் எனக்கு நினைவிற்கு வருகிறது: இதயம் திரைப்படத்தில் இருந்து "ஏப்ரல் மேயிலே" மற்றும் வாலி படத்தில் இருந்து "ஏப்ரல் மாதத்தில்".
இந்தப் பாடலில் குறும்புதான் முக்கியம். வயதான இளையராஜா பிரபுதேவாவுக்குப் பாடுவதைக் கேட்பது சற்று வித்தியாசமாக இருந்தாலும் ரசிக்கும்படியான பாடல்.

"இதயம் திருடுதல் முறையா? அந்தக் களவுக்கு தண்டனைகள் இல்லையா?" மற்றும் சில வரிகள் வைரமுத்துவுக்கே உரிய குசும்புடன் அமைந்திருக்கும். இந்தப் பாடலுக்குப் பிறகு உன்னி கிருஷ்ணன் இதைப்போல பல பாடல்கள் பாடியிருப்பினும், இந்தப் பாடலைப் போல அமைய வில்லை!!



தேவன் ஏகாம்பரத்தின் பாடல்களில் எனக்குப் பிடித்த ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று (இரு விழி உனது (மின்னலே), நினைவுகள் தானே (கண்டேன் படப் பாடல்), ஸ்மையாய் (கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்) போன்றவை வேறு சில பாடல்கள்).
"பெண்: போ போ என்ற சொல்லுக்கு வா வா வா என்று அர்த்தமே, அகராதி இங்கு மாறும் அன்பே...." "ஆண்: ஆடைக்குள் மூடி நிற்கிறாய், அது கூட வேறு அர்த்தமா... ஆஹாஹா புரிஞ்சு போச்சு அன்பே" என்று நோகாமல் எழுத வைர முத்துவால் மட்டும் தான் முடியும். (அவர்தானே எழுதினார்?)

மே மாதம் 98-ல் பாட்டு கூட நல்ல பாட்டுத்தான், ஆனா இங்கே வேண்டாம் :-)

பிரியமானவளே படத்தில் பிடிக்காத பாட்டு இது... இருந்தாலும், மாதக் கணக்குக்காக, ஜூன் ஜூலை மாதத்தில்.

வரிசையாக விஜய் படப் பாடல்களே அமைகின்றன. என்னவோ தெரியவில்லை.. கார்த்திக் குரலுக்காகவும், ரீமா சென்னுக்காகவும் கண்டிப்பாக ஜூலை மலர்களே பாடலை ரசிக்கலாம்.

ஆகஸ்ட் மாதத்திற்கு எனக்குப் பாடல் கிடைக்கவில்லை... ஆனால், வந்தே மாதரம் பாட்டை வைத்திக் கொள்ளலாமே... இப்போதெல்லாம் (இந்தப் பாடல் வெளி வந்த காலத்தில் இருந்தே) இதைப் பல இடங்களில் தேசிய கீதமாகவே பாடுகிறார்கள்... ஜனகண மண தேசிய கீதம் தான்... அவ்வப்போது ஒரு மாற்றத்துக்கு நமக்குப் புரிந்த மொழியில் பாடுவதில் தவறில்லையே!!


அலைபாயுதே படத்தில் இருந்து செப்டம்பர் மாதம் பாடல்.... அக்டோபர் மாதத்திற்கும் இதேதான்... வேறு பாட்டு நினைவிற்கு வரவில்லை.

ரெட் படத்தில் இருந்து நவம்பர் மாதம் பாடல்...  இந்தப் படத்தில் இருந்து 'ஒல்லிக்குச்சி' பாட்டுத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கு.... ஆனாலும் இப்போதைக்கு இதுதான் பொருத்தமாக இருக்கும்...

ஜனவரி நிலவே என்றொரு பாட்டு இருப்பது இந்தப் பதிவை எழுத ஆரம்பித்த பிறகு தான் தெரியும்... முதல்முறை கேட்கும்போதே எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை... அது இங்கே கிடையாது. பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு எனக்குப் பாட்டு கிடைக்கவில்லை..

இன்னும் தமிழ் மாதங்களுக்கென்று ஒரு தனிப் பதிவே எழுதும் அளவுக்குப் பாடல்கள் உண்டு. இங்கே அவை கிடைக்காது. ஒரு மாதிரிக்காக வேண்டுமானால் "வைகாசி நிலவே..." (உன்னாலே உன்னாலே)...
இன்னைக்கு இவ்ளோதான்.. மீதி வேறொரு நாள்.... போயிட்டு வரேனுங்கோ!!!


Tuesday, May 31, 2011

விரைவில்....

ஒரு டைரியின் கைதி (சிறுகதையோ அல்லது கவிதையோ எழுதுவதாய் எண்ணம், கட்டுரையாகக் கூட இருக்கலாம்)...
அப்பவே சொன்னாங்க தலைப்பை வெச்சுக்கிட்டு கதையைத் தேடாதடான்னு :)
திரையிசையில் மாதங்கள் 
- மார்ச், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்குப் பாடல் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் ஜனவரி மாதத்திற்கும் ஒரு நல்ல பாட்டு வேண்டும் (7G-யின் பாட்டு எனக்கு அவ்வளவு விருப்பமில்லை)


இப்போதைக்கு இவ்வளவுதான்.. இந்தப் பதிவினை நான் அடிக்கடி புதுப்பிப்பேன். 

Monday, May 30, 2011

இளையராஜாவின் இசையில் பிரபு.

இந்தப் பதிவில், என்னைக் கவர்ந்த ஐந்து பாடல்களைத் தருகிறேன். இதுதான் என்னுடைய முதல் பதிவு: இந்த வகையில். எப்படி வருகிறதென்று பார்ப்போம்.

இந்தப் பாடலில் எம். எஸ். வி-யின் பங்களிப்பு இருப்பினும், இங்கே நான் ராஜாவின் பாடலாகவே கணக்கெடுத்துக் கொள்வேன். எனக்கு மிகவும் பிடித்தது, இறுதியில் வரும் மழைத்துளி சத்தம். மிகவும் செயற்கையான ஓசை, இருந்தாலும், மழையின் ஓசை இவ்வளவு நன்றாக இருக்குமென கற்பனை செய்யத்தூண்டும்!
அடுத்து, ராஜகுமாரனில் வரும் "என்னவென்று சொல்வதம்மா....". பாலாவுக்கே உரிய குறும்பினைச் செய்ய ராஜா முழு சுதந்திரம் அளித்திருப்பார். நமட்டுச் சிரிப்பு வேறு, இடையிடையே!!
ஒரு கட்டத்தில் பிரபு நடித்த அனைத்துப் படங்களும் வெற்றிப் படங்கள். அதில் இதுவும் ஒன்று... மனோ என்று நினைக்கிறேன்... சரியாகத் தெரியவில்லை...
இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும், ராஜா அரை மணி நேரத்தில் இசையமைத்ததாய்க் கேள்வி... எந்த அளவு உண்மையோ தெரியாது, ஆனால் ஒவ்வொன்றும் முத்துக்கள். நான் சின்னப் பையனாய் இருந்த போது மனப்பாடம் ஆன பாடல்களில் இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் சேர்த்தி!!
"மாமர இலை மேலே மார்கழிப் பனிபோலே...." என்று ஏசுதாஸ் கூவும்முன் (அவர்தான் குயில் ஆயிற்றே...) பின்னணியில் வரும் குழலிசைக்கும் இவர் குரலுக்கும் ஒரு மிகப் பெரிய போட்டியே நடக்கும்... யார் தோற்றாலும், வெற்றி என்னவோ ராஜாவுக்குத்தான்.
இது ஒரு திடீர் பதிவு. தொடர்ந்தாலும் தொடரும்.