Tuesday, July 12, 2011

அதே மாதிரி போட்டுக் குடுங்க சார்...

தமிழ்த் திரைப்படங்களானாலும் சரி, பொதுவாக இந்தியத் திரைப்படங்களானாலும் சரி, பாடல்கள் இல்லாமல் இருக்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில படங்கள் பாடல்கள் இல்லாமல் வந்தாலும், ஒரு படத்தினை ஆண்டாண்டு காலங்கள் நினைவில் நிறுத்துவது என்னமோ பாடல்கள் தான். தேவர் மகன் படத்தின் முழுக் கருவையும் "வானம் விட்டு வந்த..." என்ற சோகப் பாடல் சொல்லி விடும். முதல் மரியாதையின் அனைத்துப் பாடல்களையும் கேட்டால் அந்தப் படத்தின் ரசம் நம்முள் மீண்டும் ஒரு முறை இறங்கி விடும். "தமிழா தமிழா..." பாடல் ரோஜாவின் உயிரோட்டத்தைச் சொல்லி விடும்.

அனைவரும் பிறவிக் கலைஞராக இருக்க முடியாது. சிலர் காலம் காலமாகக் கற்றும், பயிற்சி செய்தும் மாத்திரமே ஒரு துறையில் சிறப்படைய முடியும். அவ்வாறு கற்கும் போது நம்முடைய குருவின் சாயல் நம்முடைய படைப்பிலும் இருப்பதைத் தவிர்ப்பது என்பது மிகக் கடினம். உந்துதல் (inspiration) என்பதற்கும் மாதிரி (copy) என்பதற்கும் நூலிழை அளவுதான் வேறுபாடு இருக்கிறது என்பது என் எண்ணம். உதாரணம், பெரும்பாலான ரகுமானின் இசையானது மேற்கத்திய இசையால் உந்தப் பட்டது. தேவாவின் பல பாடல்கள் மேற்கத்திய இசையை மாதிரி எடுக்கப்பட்டவை (ஓ நெஞ்சே & Backstreet Boys, அகிலா அகிலா & Bob Marley). இப்படி பல பாடல்களின் மூலப் பாடல்கள் தெளிவாகத் தெரிந்தாலும் சில பாடல்களின் கரு, ராகங்கள், வரிகள், அல்லது அமைப்பு அதற்கு முன்னர் கேட்டது போலவும் பார்த்தது போலவும் இருப்பதுண்டு. அதைப்போன்ற சில பாடல்களை இங்கே தொகுத்துள்ளேன். ஒரே இயக்குனரின் அல்லது இசையமைப்பாளரின் பாடல்கள் ஒன்று போலவே அமைவதுண்டு. அவற்றை இங்கே தவிர்த்துள்ளேன். (உதாரணம்: யுவனின் சக்கைப் போடு போட்டானே (தாஸ்) & அடடா மழைடா அடை மழைடா (பையா)).

மதறாஸப்பட்டினம் படத்தை டைட்டானிக் அல்லது லகான் படத்தின் மறுபதிவு என்று சொல்லுவேன். அதை உறுதிப் படுத்துவது "பூக்கள் பூக்கும் தருணம்" பாடல். சைந்தவியின் குரலும் கவிஞரின் வரிகளும் (நா. முத்துக்குமார்?) பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்க வைப்பினும் அந்த ஆங்கில வரிகள் வரும்போது எனக்கு லகானின் காலத்தால் அழியாத "ஓ ரே சோரி..." பாடல் தான் நினைவிற்கு வரும். கீழே இரண்டு பாடல்களின் சலனப் படங்கள்.


இப்போதுதான் நினைவிற்கு வருகிறது இந்தப் படங்களின் இன்னொரு ஒற்றுமையும். லகான் படத்திலும் மழையைப் பற்றி ஒரு பாடல் வரும். மதறாசிலும் அதே போல் ஒரு பாடல் (மேகமே...)  இருப்பதை நான் சொல்ல வேண்டாம். அது சரிதான். லகானை எடுப்பது என்றான பின், பாட்டை ஏன் விட்டு வைக்க வேண்டும். இதில் கூத்து என்னவென்றால் இதே இயக்குனர் தெய்வத்திருமகள் படத்தில் நம் அன்பிற்குரிய விக்ரமை "சாம்" ஆக நடிக்க வைத்திருப்பதுதான். தெய்வத்திருமகள் பார்ப்பதற்கு முன் மறந்தும் கூட "ஐ ஆம் சாம்"- படத்தைப் பார்த்து விடாதீர்கள் -- விக்ரமின் கடின உழைப்பை பாராட்டாமல் போய் விடுவீர்கள்.

செல்வராகவன் யுவனிடம் இருந்து பிரிந்த உடன் வந்த இரண்டு படங்கள் யுவனின் "சர்வம்" மற்றும் செல்வாவின் "ஆயிரத்தில் ஒருவன்".. இரண்டு படங்களிலும் ஒரே மாதிரி பாடல் இடம்பெற்றிருப்பது ஒரு coincidence ஆக மட்டும் இருந்து விட முடியாது. நமக்காகவே இந்த இரண்டு பாடல்களையும் கலந்து கட்டி கீழே இருக்கும் சலனப் படத்தில் அடித்திருக்கிறார்கள்!!


இன்னும் சில பாடல்களைச் சேர்ப்பதாக இருந்தேன்.. வேறு ஒரு நாளில்.

அன்புடன் மதி.

பி. கு. தலைப்பின் அர்த்தத்தை விளக்க வேண்டாம் என நினைக்கிறேன். என்னதான் இசையமைப்பாளர்களை நாம் குற்றம் சொன்னாலும், இயக்குனரின் இந்தக் கேள்விதான் அவர்களை இவ்வாறு இசையமைக்கத் தூண்டுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் மனதில் தோன்றும் மகிழ்ச்சியோ காழ்ப்புணர்ச்சியோ சொன்னலொழிய எனக்குத் தெரியாது.