Monday, July 11, 2011

மயக்க ஊசியும் சர சர சாரக் காத்தும்.

ரகுமான், யுவன் சங்கர் ராஜா, ராஜா, ஹாரிஸ் ஆகிய யாரும் புதிய பாடல்களைத் தராத நேரத்தில் கடந்த சில வாரங்களாக நான் 2000-ம் வருடத்திற்கு முந்தைய பாடல்களைக் கேட்டுக் களித்துக் கொண்டிருந்தேன். புதிதாக வந்த எந்தப் பாடலும் மனதில் நிற்காத நேரத்தில் வந்தன "வாகை சூட வா" மற்றும் "யுவன் யுவதி".
முதலாவதிற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சில பாடல்கள் கேட்கும் படி உள்ளன... வைரமுத்தின் வழக்கமான கிராமத்துக் குறும்போடு வந்திருக்கிறது "சர சர சாரக் காத்து வீசும் போதும்"... சின்மயி மிகவும் நன்றாகப் பாடியிருக்கிறார் -- நீண்ட நாட்கள் கழித்து... என்னதான் இந்தப் பாடல் எங்கோ கேட்ட உணர்வைக் கொடுப்பினும், கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. "மொடக்கத்தான் ரசம்...", "இத்துப் போன நெஞ்சத் தெக்க", "டீயைப் போல ஆத்துற.." போன்ற வைரமுத்துவுக்கே உரிய குசும்பான வரிகளோடு வந்திருக்கிறது.
இதே படத்தில் வேறு சில பாடல்களும் நன்றாகத்தான் உள்ளன. "தஞ்சாவூரு மாடத்தி..." பாடல் சிறிய பாடலாய் இருந்தாலும் ஜெயமூர்த்தியின் குரல் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கிறது. இவர் "mainstream" பாடகரா என்பது தெரியாது, இருந்தாலும் இவரைப் போன்ற அமெச்சூர்களால் தான் இப்படிப்பட்ட ஒரு துள்ளலோடு பாட முடியும். "போறானே போறானே" பாடலின் ஆரம்ப குழல் இசை "நான் போகிறேன் மேலே மேலே..." (நாணயம்) பாடலை நினைவு படுத்துகிறது. 

"யுவன் யுவதி" படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்திருக்கிறார். ஆறு பாடல்கள் இருப்பினும், மனதில் நிற்பது என்னவோ "மயக்க ஊசி..." மட்டும்தான். விஜய் பிரகாஷ் கடந்த இரு வருடங்களாக அத்தனை நல்ல பாடல்களைப் பாடி வைத்து விட்டார்... இவர் நீண்ட நாட்கள் களத்தில் இருக்க வேண்டும் என்று நமக்கு ஆசை. இந்தப் படத்தில் துள்ளலாக சில பாடல்கள் உள்ளன என்பதை மறுக்க இயலாது. குத்துப் பாட்டு ரசிகர்களுக்கென்றே "கொலக் குத்து". 


சமீப காலமாக பழைய மற்றும் புதிய ஹாலிவுட் மற்றும் இன்னபிற நாட்டுப் படங்களைப் பார்த்துள்ளேன். அவற்றைப் பற்றி கூடிய சீக்கிரம் எழுத முயற்சிக்கிறேன். 

அன்புடன், 
மதி. 



No comments:

Post a Comment

உங்கள் மனதில் தோன்றும் மகிழ்ச்சியோ காழ்ப்புணர்ச்சியோ சொன்னலொழிய எனக்குத் தெரியாது.